Advertisement

Tuesday, June 17, 2014

ஓட்டம் ஆரம்பம் – திரை விமர்சனம்

படத்தின் நாயகி எழிலும், அவரது முறைமாமான சண்முகமும் காதலித்து வருகின்றனர். சண்முகம் போலியோ நோயால் ஒரு காலை இழந்தவர்.
இவர்கள் காதலுக்கு சண்முகத்தின் அப்பா ஆதரவாக இருக்கிறார். அதன்படி, நாயகியின் அப்பாவிடம் சென்று பெண் கேட்கிறார். ஆனால், நாயகியின் அப்பாவோ சண்முகத்தின் கால் ஊனத்தை வைத்து அவருக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்.
இதையடுத்து இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். பதிவு திருமணம்
செய்து கொள்ள சர்டிபிகேட் தேவைப்படுவதால், இருவரும் தங்களது சர்டிபிகேட்டை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
ஒரு சர்ச்சில் சந்திக்கும் அவர்கள், அங்கிருந்து பதிவாளர் அலுவலகத்திற்கு காரில் புறப்படுகிறார்கள். அப்போது, நாயகி அந்த சர்பிகேட்டுகளை அங்கேயே தவற விட்டு விடுகிறார். சிறிது தூரம் சென்றதும் சர்டிபிகேட் ஞாபகம் வர, அதை எங்கே தவறவிட்டோம் என்பது தெரியாமல் இருவரும் தவிக்கிறார்கள்.
திரும்பி சென்று எடுத்துவரலாம் என்று யோசித்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உட்கார்ந்துகொண்டு என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது, இவர்கள் சந்தித்த சர்ச்சுக்கு வரும் ஜான் மற்றும் அவரது மாமா இருவரும் அங்கு கீழே கிடக்கும் சர்டிபிக்கேட்டை பார்க்கிறார்கள். அதை எடுத்து அதில் உள்ள முகவரியில் கொண்டுபோய் கொடுத்துவிடலாம் என முடிவெடுத்து நாயகியின் வீட்டுக்கு செல்கிறார்கள்.
ஆனால், அங்கு அவரது அப்பாவுடைய ஆட்கள் அவளை காணவில்லை என்று கூறி, சண்முகத்தின் உறவினர்களை போட்டு அடிப்பதை பார்க்கின்றனர்.
இப்போதைக்கு சர்டிபிகேட்டை கொடுக்க சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து அங்கிருந்து இருவரும் கிளம்பி சென்றுவிட்டார்கள். இவர்கள் கண்டெடுத்த பைலை பரிசோதிக்கும் ஜான், அதற்குள் ஒரு போன் நம்பர் இருப்பதை பார்க்கிறான். அந்த போன் நம்பருக்கு போன் செய்கிறான். அதன் மறுமுனையில் சண்முகம் பேசுகிறார்.
தாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் இருப்பதாகவும், ஊருக்குள் வந்தால் மாட்டிக் கொள்ள நேரிடும், அதனால், அந்த சர்டிபிகேட் பைலை தங்களிடம் வந்து ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறுகிறார்.
பணத்துக்கு ஆசைப்பட்டு ஜானும் அவரது மாமாவும் அந்த பைலை எடுத்துக் கொண்டு அவர்கள் சொன்ன இடத்துக்கு சென்று கொடுக்கச் செல்கின்றனர். அவர்கள் சொன்ன இடத்துக்கு நாயகியின் அப்பாவுடைய ஆட்களும் வருகின்றனர்.
இதற்கிடையில் ஜானின் மொபைல் சார்ஜ் இல்லாமல் போக, நாயகி அப்பாவுடைய ஆட்களுடைய செல்போனை வாங்கியே அவனுக்கு போன் செய்கிறான் ஜான். அதை காருக்குள் இருந்து பார்க்கும் சண்முகம், ஜான் தான் அவர்களை கூட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறான்.
சண்முகத்திடம் பேசிய பின், போனை நாயகியின் தந்தை அனுப்பிய ஆட்களிடம் கொடுத்துவிட்டு ஜான் அங்கிருந்து சென்று விடுகிறான். ஜானிடமிருந்து போனை வாங்கிய அவர்கள் அதில் அவன் சண்முகத்தின் போனுக்கு அழைத்துள்ளதை பார்க்கிறார்கள்.
அவனுக்கும் சண்முகத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று எண்ணி, அவனை பிடித்தால் சண்முகத்தை பிடித்துவிடலாம் என ஜானை தேட ஆரம்பிக்கின்றனர்.
இறுதியில் ஜானை கண்டுபிடித்து சண்முகத்தை பிடித்தார்களா? ஜான் சர்டிபிகேட்டை காதலர்களிடம் கொடுத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தானா? என்பதே மீதிக்கதை.
படத்தில் ஜான் மற்றும் அவரது மாமா, சண்முகம் என மூன்று பேரும் படத்தின் முக்கால் பாகம் நிறைந்திருக்கிறார்கள். படத்தில் அனைவருக்குமே குறைவான வசனம் தான். அனைவரும் மணிரத்னம் படத்தில் வருவது போல் ஒன்றிரண்டு வார்த்தைகளை பேசியே காட்சிகளை முடித்துவிடுகிறார்கள்.
நாயகி எழிலுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கம்மி தான். ஆனாலும் நிறைவாக செய்திருக்கிறார். இவருடைய முறை மாமனாக வரும் சண்முகம் படம் முழுக்க முறைத்துக்கொண்டே தான் இருக்கிறார். தயாரிப்பாளர் இவருக்கு சம்பளம் கொடுக்கவில்லையோ என்னவோ என்று யோசிக்க வைக்கிறது.
படத்தில் நிறைய இடங்களில் இயக்குனர் ஜான் சறுக்கியிருக்கிறார். சர்டிபிகேட் பைலை நாயகி வேண்டுமென்றே தொலைப்பது போல் காட்சியமைத்திருப்பதை பார்த்ததுமே படம் இன்னும் நீளப்போகிறது என்பது தெரிந்துவிடுகிறது.
படத்தில் சஸ்பென்ஸ் வைப்பதாக கூறி காட்சிகள் முழுவதையும் நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். படத்தில் ஒரேயொரு பாடல் வைத்திருப்பது மனதிற்கு ஆறுதல். ஆனால், சிவசங்கரின் பின்னணி இசை பரவாயில்லை.
மொத்தத்தில் ‘ஓட்டம் ஆரம்பம்’ வேகமில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...