Advertisement

Monday, June 16, 2014

இயக்குநர் மணிவண்ணனை அவமானப்படுத்திய பார்த்திபன் - தயாரிப்பாளர் கோபம்

மறைந்த நடிகரும், இயக்குநருமான மணிவண்ணனை, இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் அவமானப்படுத்தி விட்டார் என்று, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார். இவர் மணிவண்ணன் இறுதியாக இயக்கிய 'ராஜராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' (அமைதிப்படை-2) படத்தை தயாரித்தவர். தற்போது கங்காரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் இவர், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ  (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில்
நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்தி பேசியும் உள்ளார். 

அதன் பிறகு அதைத் தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் சுதர்சன்.

இப்பொழுது பார்த்திபன்  தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை,திரைக்கதை ,வசனம்,டைரக்ஷன்' படத்தின்  பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாக அழைப்பிதழில் அச்சடித்திருந்தார். அப்படிஎன்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா?

50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும்  முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று  அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை  முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக  குறிப்பிடுகிறது.

இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு  எண்ணத்தைத்தான்  பதிகிறது. அதை  இந்த 'முறையாக' என்ற  ஒரு வார்த்தை காட்டிக்கொடுத்துவிடுகிறது.

இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது  சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய விஷயம்? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில்  20 படத்தைக்  கூட எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா?

அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா?

தைரியம் இருந்தால் ஒரு உதவி படத்தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத்தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை  தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். அதற்கு எங்கள் நிறுவனம் சம்மதிக்காது..  இது தவறு என்பதை உணர்ந்து  பார்த்திபன் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவேண்டும்..

தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த  விசயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும்  ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ? அவர் வேண்டுமானால் எது வேணா புடிச்சித் திரியட்டும். ஆனால்  அந்த கிறுக்கு  புதுமைக் கிறுக்கு படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் கிறுக்கு பிடிக்க வைக்காமல் இருந்தால் சரிதான்!!

இவ்வாறு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...