Advertisement

Wednesday, June 18, 2014

ஜூலை மாதம் வெளியாகும் 'நளனும் நந்தினியும்' - நம்பலாமா!

வெளிநாட்டில் வேலை செய்து பெரும் தொகை சம்பாதித்த சிலர், அவ்வபோது தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து பரபரப்பு ஏற்படுத்துவதும், பிறகு கையை சுட்டுக்கொண்டு அவர்கள் பறந்துவிடுவதும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில், ஐ.நா சபையில் முக்கிய பணியில் இருந்த ரவீந்தர் சந்திரசேகரன், லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் பல படங்களை தயாரித்து வந்தார். இவர் பிரஸ் மீட் வைத்தாலே, ஒரு படத்திற்கு வைக்க மாட்டார். மூன்று, நான்கு, ஐந்து என்று கொத்து கொத்தாக படங்களுக்கு பிரஸ் மீட் வைப்பார்.
ஒரே சமயத்தில் சுமார் பத்து படங்களை தயாரித்து வந்த இவர், அதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அறிவித்தார்.

இதற்கிடையில், இவர் தயாரிப்பில் உருவான 'சுட்ட கதை' என்ற படம் மட்டுமே ரிலீஸானது. அப்படம் இவருடையை கையை ரொம்பவே சுட்டுவிட்டதால், இவர் தயாரிப்பில் உருவான 'நளனும் நந்தினியும்' என்ற படம் இன்னும் வெளிவரவில்லை. இப்படம் குறித்து வெளியீட்டு தேதிகளை பலமுறை ரவீந்திரர் அறிவித்தாலும், படம் மட்டும் ரிலீஸானதாக இல்லை.

இதற்கிடையில், இப்படம் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி வெளியாவதாக, மீண்டும் ரவீந்தர் சந்திரசேகரன் அறிவித்துள்ளார். அதுமட்டும் இன்றி, இனி மாதம் ஒரு படத்தை வாங்கி வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

அறிவிப்பை மட்டும் வெளியிட்டால் போதாது சார், படத்தையும் வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...