Advertisement

Wednesday, June 18, 2014

நான்தான் பாலா



இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த விவேக், கதையின் நாயகனாக, அதுவும், காமெடி அற்ற நாயகனாக நடித்துள்ள படம் தான் 'நான்தான் பாலா'.

கும்பகோண பெருமாள் கோவிலில் பூசாரியாக இருக்கும் விவேக்கிற்கு, காஞ்சிபுரத்தில் உள்ள கூலிக்கு கொலை செய்யும் பூச்சி என்ற ரவுடி உதவி செய்கிறார்.


இதற்கிடையில், விவேக்கின் அம்மாவும், அப்பாவும் மரணம் அடைய, தனக்கு பண உதவி செய்யும் பூச்சிக்கு பணத்தை திருப்பி கொடுப்பதற்காக, காஞ்சிபுரம் வரும் விவேக் பூசியுடனே தங்குகிறார். காஞ்சிபுரத்தில் வீதி வீதியாக போலி விற்பனை செய்யும் ஸ்வேதா, விவேக்கின் நிலையை அறிந்து அவர் மீது இறக்கப்பட, பிறகு அதுவே காதலாக மாறுகிறது.

விவேக்குக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்து வைக்க பூச்சி எற்பாடு செய்ய, பூச்சியினால் கொலை செய்யப்பட ஒருவரது அண்ணன், பூச்சியை பழிவாங்க நினைக்கிறார். அவரால் பூச்சியை கொலை செய்ய முடியவில்லை என்றதும், போலீசிடம் உண்மையை சொல்ல போலிசோ பூச்சியை பிடிப்பதைவிட, அவரை ஏவிவிட்ட, கூலிப்படை தலைவனான கை தென்னவனை பிடிக்க பூச்சியை அப்ரூவராக்க முடிவு செய்கிறது.

யார் சொன்னாலும் கேட்காத பூச்சி விவேக், சொன்னால் கேட்பான் என்பதை தெரிந்துக்கொண்ட போலிஸ், பூச்சியை மனம் மாற்றி அப்ரூவராக மாற்ற உதவி செய்யுமாறு விவேக்கை கேற்க, இதுவரை பூச்சி ஒரு கொலைகாரன் என்பதை அறியா விவேக், தனக்கு அவர் செய்த உதவிக்காக, பூச்சியை நல்வழிப்படுத்த நினைத்து, போலிஸ் சொன்னது போல அவரை அப்ரூவராக மாற்ற முயற்சிக்கிறார்.

இதற்கிடையில், பூச்சியின் விஷயத்தில் விவேக் தலையிடுவதால், அவரை விட்டு ஸ்வேதா பிரிய, இறுதியில் பூச்சியை விவேக் அப்ரூவராக  மாற்றினாரா?  அவருடைய ஸ்வேதா அவருக்கு கிடைத்தாரா இல்லையா என்பதுதான் கதை.

நக்கலாக பேசி நம்மை சிரிக்க வைத்த விவேக், இப்படத்தில் நம்மை கண்கலங்க வைக்க வைக்கிறார். கண்ணில் மையும், நெற்றியில் ஒற்றை நாமமும்  என்று, அந்த பெருமாளைப் போலவே பவ்வியமாக காட்சியளிக்கிறார். சில இடங்களில் எப்படி சோகமாக நடிப்பது என்பதில் சற்று தடுமாறுவது ரொம்ப நன்றாகவே தெரிகிறது. இருப்பினும், ஏற்றுள்ள கதாபாத்திரத்தை உணர்ந்து ரொம்ப கவனமாகவே நடித்துள்ளார்.

போலி வியாபாரியாக வரும் நாயகி ஸ்வேதா, அந்த போலி தயாரிக்க பயன்படும் மைதா மாவைப் போலவே  இருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பு இல்லை என்றாலும், சவுராஷ்டிரா ஐயர் பெண்ணுக்கு பக்காவாக பொருந்துகிறார்.

பூச்சி என்ற வேடத்தில் நடித்துள்ள புதுமுகம் வேங்கடராஜு, விள்ளத்தனத்துடன் காமெடியாகவும் நடிக்கிறார். குணச்சித்திர வேடத்திற்கு எற்ற நடிகர்.

விவேக்குடன் துண்டு காமெடியனாக நடித்துவந்த செல் முருகன் இப்படத்தில், முழு காமெடியனாக புரோமோஷன் அடைந்திருக்கிறார். விவேக் இப்படத்தில் காமெடியனாக நடித்திருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதை அப்படியே செய்திருக்கிறார்.

இசை, ஒளிப்பதிவு என்று அனைத்துமே படத்திற்கு ஏற்றவாறு அளவாக உள்ளது.

பிரமாணன் ஒருவருக்கும், ரவுடி ஒருவருக்கும் உள்ள நட்பை பற்றியும், பணத்திற்காக கொலை செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதையும், அதில் பாதிக்கப்பட்டவர்களின் நிலையையும் ரொம்ப அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

படத்தில் வசனத்திற்கு முக்கியப் பங்கிருந்தும், பல இடங்களில் கதாபாத்திரங்களை  மெளனமாகவே வைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, நாயகி ஸ்வேதா, நான் வேண்டுமா அல்லது பூச்சி வேண்டுமா, என்று கேட்கும் இடத்தில், வேதம் படித்த விவேக், ரொம்ப அழுத்தமகா, அதே சமயம் சுறுக்கமாக, ஒரு வசனத்தை பேசி இருந்தால் அந்த காட்சி இன்னும் வலுவாக இருந்திருக்கும். ஆனால், இயக்குனருக்கு அந்த இடத்தில் வலிமையான வசனம் எழுத முடியவில்லையோ, என்னவோ, விவேக்கை மெளனமாக இருக்கச் செய்து சமாளிக்கிறார்.

இப்படி பல இடங்களில், பல காட்சிகளில் இயக்குனர் தனது வலிமையை  நிரூபிக்க தவறினாலும், சொல்ல வேண்டியதை தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...