Advertisement

Tuesday, June 17, 2014

வாழும் தெய்வம் – திரை விமர்சனம்


அமராவதி குடியிருப்பில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கிறது. ராதாரவி வீட்டில் அவரது மகன் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாய் ஊரை சுற்றி பொழுதை கழிக்கிறார். இதற்கிடையில் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். இந்த காதல் ஒரு கட்டத்தில் ராதாரவிக்கு தெரியவருகிறது.
மகனை கண்டிக்காமல் அவனது காதலை சேர்த்துவைப்பதாக உறுதி கூறுகிறார். அதற்காக, மகன் காதலிக்கும் பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கிறார். ஆனால்,
பெண்ணின் அப்பாவான காதல் தண்டபாணி, திருமணம் செய்து கொடுக்கமுடியாது என்று கூறுகிறார். அவரிடம் எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தியே தீருவேன் என்று சொல்லிவிட்டு ராதாரவி திரும்புகிறார்.
இதற்கிடையில், ராதாரவி வீட்டில் பெண்ணின் கால் நடுவிரல் நீண்டு இருப்பது குடும்பத்துக்கு ஆகாது என்று ராதாரவியின் மனைவியும், அம்மாவும் அவளை வேண்டாமென்று கூறுகின்றனர். ஆனால், ராதாரவி விடாப்பிடியாக அவளைத்தான் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கவேண்டும் என்று இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் ராதாரவி இறந்துபோக, அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவும், பாட்டியும் சொன்னபடி தான் காதலிக்கும் பெண்தான் காரணம் என்று கூறி அவளை வெறுத்து ஒதுக்குகிறார் ராதாரவியின் மகன்.
அதே குடியிருப்பில் வாழும் மற்றொரு குடும்பமான வையாபுரி குடும்பத்தில், வையாபுரியும் எந்த வேலைக்கும் போகாமல், ஒவ்வொரு தேர்தலிலும் நின்று தன் சொந்த காசை செலவிட்டு தோற்றுக்கொண்டு வருகிறார்.
இதனால், அவரது மனைவி நிம்மதி இல்லாமல் தவிக்கிறார். இன்னொரு வீட்டில் மனநிலை சரியில்லாத அம்மாவை, பள்ளிக்கு செல்லும் சிறுவன், வேலை செய்து கொண்டே பள்ளிக்கும் போய் படித்துக்கொண்டு அம்மாவையும் கவனித்து வருகிறான். மற்றொரு வீட்டில் இருக்கும் டி.பி.கஜேந்திரன் போதைக்கு அடிமையான மகனை வைத்துக்கொண்டு தினமும் தவியாய் தவித்து வருகிறார்.
இன்னொரு வீட்டில் வசிக்கும் ஸ்ரீமன், அழகான இளம் மனைவியை தவிக்க விட்டு விபத்தில் இறந்துவிடுகிறார். இறந்து பேயாக வந்து தனது மனைவியின் நிர்பந்தத்தால் அந்த வீட்டிலேயே தனது பேய் நண்பர்களான முத்துக்காளை, கொட்டாச்சி ஆகியோருடன் தங்கும் அவர்கள் அந்த குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் சென்று எல்லாவற்றையும் திருடுகின்றனர்.
இதனால், பெரும் அவதிக்குள்ளாகும் ஸ்ரீமன் மனைவி அவர்களை வீட்டை விட்டு செல்லும்படி கூறுகிறார். ஆனால், யாரும் போக மறுக்கிறார்கள்.
இப்படி ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்க, அவர்கள் அனைவரும் ஒரு நாள் பிரச்சினைக்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள். அங்கு ரேகாவை சந்திக்கிறார்கள். ரேகா அவர்களுக்கு இந்த பிரச்சினையிலிருந்து விடுபட ஆத்தூர் அருகே இருக்கும் நாவலூர் கிராமத்தில் இருக்கும் மீனாட்சி அம்மாவை பார்த்து உங்கள் குறைகளை கூறினால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று கூறுகிறார்.
இப்படியாக ஒவ்வொருவரும் அங்கு சென்று மீனாட்சி அம்மாவை சந்தித்து அவரிடம் தங்கள் குறைகளை கூறுகின்றனர். அவரும் இவர்களது ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்த்து வைக்கிறார். ராதாரவியின் மகன் மனம் மாறி தனது காதலியையே திருமணம் செய்து கொள்கிறான்.
வையாபுரி தேர்தலில் வெற்றிபெற்றுவிடுகிறார். பேயாக இருக்கும் ஸ்ரீமன், தனது பேய் நண்பர்களுடன் அந்த வீட்டிலிருந்து ஓடி விடுகிறார். இப்படி எல்லோர் பிரச்சினையும் தீர்ந்துவிடுகிறது.
தனது மகளை பறிகொடுத்த வேதனையில் இருக்கும் தண்டபாணியும், தேர்தலில் வையாபுரியுடன் தோல்வியடைந்த விரக்தியில் இருக்கும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் இதற்கு காரணமான மீனாட்சி அம்மாவை தீர்த்துக்கட்டுவது என முடிவெடுத்து நாவலூர் செல்கின்றனர். அங்கு சென்றவுடன் தான் தெரிகிறது அங்கு ஏற்கெனவே மீனாட்சி அம்மாவுக்கு இன்னொரு எதிரி இருக்கிறார் என்று.
அந்த எதிரி யார்? அந்த எதிரியுடன் இணைந்து இவர்கள் மீனாட்சி அம்மாவை தீர்த்துக் கட்டினார்களா? அல்லது இவர்களை மீனாட்சி அம்மா பலி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.
ராதாரவி, நளினி, டி.பி.கஜேந்திரன், மனோபாலா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன், சிஐடி சகுந்தலா, சத்யப்பிரியா, குயிலி என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். வில்லி வேடத்திற்கு நளினி கச்சிதம்.
மீனாட்சி அம்மாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையே திரைப்படமாக்கி கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர். படம் முதல் பாதியில் விறுவிறுப்பாக சென்றாலும், பிற்பாதி ரொம்பவும் போரடிக்கிறது. தேவா இசையில் அறிமுக பாடல் ஓகே. பின்னணி இசையும் பரவாயில்லை. உதயகுமார் ஒளிப்பதிவு சுமார். மொத்தத்தில் ‘வாழும் தெய்வம்’ மனதில் வாழவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...